பேருந்து பயணத்தில் தாகமா? விரைவில் உங்கள் இருக்கைக்கே வருகிறது குடிநீர் பாட்டில்...!
ரயில்கள் மற்றும் தனியார் சொகுசுப் பேருந்துகளில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்குக் கிடைப்பது போல மாநில அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் இயக்கும் பேருந்துகளில் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
விரைவு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, பேருந்து பயணத்தின் போது குடிநீர் தேவைப்பட்டால் பயணிகளுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை கொண்டு வர அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, 1 லிட்டர் குடிநீர் பாட்டில்களை தயாரித்து விநியோகம் செய்வதற்கான இணையவழி டெண்டர் கோரப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து ஆன்லைன் இ-டெண்டர் மூலம் விண்ணப்பங்களை அரசு விரைவு போக்குவரத்து கழகம் கோரியுள்ளது. டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு, இந்த திட்டம் அமல்படுத்தப்படும் தொடர்பான விரிவான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


