திமுகவுடன் மட்டும் தான் கூட்டணி - திருமாவளவன் திட்டவட்டம்!

 
thiruma

திமுக கூட்டணியில் இடைவெளி வரும் என்று யாரும் இலவு காத்த கிளி போல காத்திருக்க வேண்டாம் என விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு திமுக தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. திமுக கூட்டணியில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள விசிக மக்களவை தேர்தலில் 3 இடங்களை கேட்டு வருகிறது. இரண்டு தனி தொகுதி மற்றும் ஒரு பொது தொகுதியை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக 2 தனித்தொகுதிகளை மட்டுமே தர விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் தொகுதி உடன்பாட்டில் இழுபறி நீடிக்கிறது. 

இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியில் இடைவெளி வரும் என்று யாரும் இலவு காத்த கிளி போல காத்திருக்க வேண்டாம். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும். இதில் எந்த மாற்றமும் கிடையாது என கூறினார்.