“பாஜகவிடம் விஜய் கவனமாக இருக்க வேண்டும்! இல்லனா அரசியல் கேள்விக்குறியாகிடும்”- திருமாவளவன் எச்சரிக்கை

 
thiruma thiruma

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பாஜக-விடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்  அரசியலமைப்பு தினத்தையொட்டி அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கேக் வெட்டப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், “மதவாத சக்திகளின் முயற்சிகளிலிருந்து அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு ஜனநாயகச் சக்திகளுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது. தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வீர வணக்கம் செலுத்தபட்டது. இலங்கையில் புதிய அரசமைப்புச் சட்டம் மாற்றி எழுதப்படும் சூழலில், ஈழத் தமிழர்களின் கோரிக்கையான கூட்டாட்சி நிர்வாக முறை மற்றும் தமிழர் இறையாண்மையை அங்கீகரிப்பதை வி.சி.க. வரவேற்பதாகவும்,ஆதரிக்கிறது.. 


இந்திய-இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் தலையீடு செய்து, தமிழர்களுக்கான இறையாண்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசுக்கு வேண்டுகோள். சிறப்பு தீவிர சீராய்வு நடவடிக்கை (SIR) என்பது குடியுரிமையைக் குறிவைத்து நகர்த்தப்படும் ஒன்று என வி.சி.க. தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. இது வெறும் வாக்காளர் பட்டியல் சீராய்வு அல்ல, குடியுரிமை குறித்த சீராய்வுதான் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டதைச் சுட்டிக்காட்டினார். தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, அரசமைப்புச் சட்டத்தையே கேலிக் கூத்தாக்கும் முயற்சி என்றும், இதனை முற்றாகக் கைவிட வேண்டும். SIR நடவடிக்கைக்கு எதிராக வி.சி.க. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருகிறது. தமிழ்நாட்டில் மொழிச் சிறுபான்மை உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் கூறுவது குறித்து, "யார் தமிழ்நாட்டை தனிமைப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அவர் விளக்க வேண்டும்.


அதிமுகவில் உள்ள செங்கோட்டையன், தவெகவில் (தமிழக வெற்றிக் கழகம்) இணைவதாக வரும் செய்திகள் எந்த அளவுக்கு உறுதியானது என்று தெரியவில்லை..  அவர் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருக்கிறாரா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் அரசியல் சூழ்ச்சி இருக்கிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பாஜக-விடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், அவரது கட்சியில் சங்கிகள் ஊடுருவி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் ஊடுருவல்கள் நிகழ்ந்தால் அவருடைய அரசியல் கேள்விக்குறியாகும். எந்த அரசியல் கட்சியும் ரோடு ஷோ போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதே வி.சி.க.வின் நிலைப்பாடு” என்றார்.