மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையினரை கைது செய்க- திருமாவளவன்

 
‘திருமாவளவன் ‘திருமாவளவன்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் மலைச்சாமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கைக் கடற்படையினரை  கொலை வழக்கில் கைதுசெய்ய வேண்டும் என விசிக எம்பி திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

திருமாவளவன்

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமேஸ்வரம் பகுதியில் புதன்கிழமை இரவு சுமார் 2000 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் கார்த்திகேயன் என்பவரின் படகு சேதம் அடைந்ததால் நான்கு மீனவர்கள் கடலில் குதித்துள்ளனர். அவர்களில் மலைச்சாமி, மூக்கையா, முத்து முனியாண்டி ஆகிய மூவரையும் இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. கடலில் குதித்த  ராமச்சந்திரன் என்பவரை இதுவரை  கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.

இலங்கைக் கடற்படையின் தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர் மலைச்சாமி இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள புங்குடு தீவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் இறந்து விட்டதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது. இந்த மரணம் விபத்தினால் ஏற்பட்டது அல்ல; இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலால் உண்டானதாகும். எனவே, இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.

திருமாவளவன் மக்களவை

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்துவதும், அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்வதும், மீனவர்களை சிறையில் அடைப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவ மக்களும் தமிழ்நாடு அரசும் இந்திய ஒன்றிய அரசைப் பலமுறை வலியுறுத்தியும் கூட இதில் உருப்படியான எந்த நடவடிக்கையையும் ஒன்றிய பாஜக அரசு எடுக்க மறுக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய குடிமக்களாக இந்திய வெளியுறவுத்துறை கருதுவதில்லை. அவர்களை இரண்டாந்தர குடிமக்களாகவே கருதுகிறது என்பதே இதற்குக் காரணம்.

இலங்கைக் கடற்படையின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தவும்,  இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை மீட்டுத் தரவும் இந்திய  வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.