இது முதல்வருக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

 
உதயநிதி

நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை  மத்திய அரசு கைவிட்டுள்ளது தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

மத்திய  நிலக்கரி அமைச்சகம் கடந்த மாதம் (மார்ச்) 29-ந்தேதி, நாடு முழுவதும் 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில்   தமிழகத்தை சேர்ந்த அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்தில் சேத்தியாத்தோப்பு கிழக்கு பகுதி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய 3 பகுதிகள் இடம்பெற்றிருந்தன. இந்த 3 பகுதிகளும் காவிரி டெல்டா பகுதிகள் ஆகும்.  ஏற்கனவே, தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு  விவசாய பணிகளை தவிர வேறு எந்த திட்டங்களையும்  மேற்கொள்ள முடியாது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க திட்டம்..  விவசாயிகள் எதிர்ப்பு..

 அப்படி இருக்கும்பட்சத்தில்   இந்த இடங்களில் எப்படி நிலக்கரி எடுக்க முடியும்? என்றும், இந்த திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும்  விவசாயிகள், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் தமிழக அரசு சார்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி  அறிவித்துள்ளார்.  

இந்நிலையில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை  மத்திய அரசு கைவிட்டுள்ளது தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் ஒன்றிய அரசு அத்திட்டத்தையே கைவிட்டுள்ளது. இது டெல்டாக்காரராக முதலமைச்சர் அவர்களுக்கும்-தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி. #விவசாயம்காப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.