த.வெ.க தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ் பெறப்பட்டன - காரணம் இது தான்..!

 
1

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் நேற்று மே 6-ந் தேதி நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.இந்நிலையில் ஆளுநர் மாளிகைக்கு, முதலமைச்சருகான சிறப்பு கான்வாய் வாகனங்களில் விஜய் சென்றார். இது குறித்து அதிகாரிகளிடம், “முதல்வராக பதவியேற்காத நிலையில் விஜய்க்கு எப்படி இந்த கான்வாய் வாகனங்கள் கொடுக்கப்பட்டன?” என ஆளுநர் அர்லேகர் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக நாம் விசாரித்த போது, ”2021-ல் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்த போது சிறிய அளவிலான பாதுகாப்புடன் மட்டும் வந்தார். முதல்வராக பதவியேற்ற பின்னர்தான் முதலமைச்சருகான சிறப்பு கான்வாய் வாகனங்கள் அவருக்கு கொடுக்கப்பட்டன.. முதல்வராக பதவியேற்ற பின்னரே முதலமைச்சருக்கான வசதிகளைப் பெற முடியும் என்கிற போது பதவியேற்காத நிலையிலேயே விஜய்க்கு இந்த வாகனங்கள் எப்படி கொடுக்கப்பட்டன?” என்பதுதான் ஆளுநர் அர்லேகரின் அதிருப்திக்கு காரணம் என்கின்றனர்.

இந்த நிலையில், பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து விஜய் வீட்டுக்கு புறப்படுவதற்கு முன்பே கான்வாய் வாகனங்கள் எடுத்து செல்லப்பட்டன. அவை தலைமை செயலகம் நோக்கி புறப்பட்டு சென்றன. 4 கான்வாய் வாகனங்களும் புறப்பட்ட நிலையில் காவல் துறையினர் மட்டுமே விஜய்யுடன் உள்ளனர்.விஜய்யுடன் கான்வாய் வாகனம் செல்லாதது தவெக கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய்க்கு, முதல்-அமைச்சருக்கு அளிக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு வளையம் எனப்படும் கான்வாய் வாகனங்கள் வாபஸ் பெறப்பட்டு உள்ளன. இதனால், கான்வாய் வாகனங்கள் எதுவுமின்றி விஜய் நீலாங்கரை வீட்டுக்கு புறப்பட்டார். இதில், தானாக முன்வந்து கான்வாய் வாகனங்களை விஜய் திருப்பி அனுப்பினார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.