தமிழ்நாட்டின் மேலும் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு!!
தமிழகத்தில் மேலும் மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள், வேளாண் பொருட்கள் ,கைவினைப் பொருட்கள் , கைத்தறி பொருட்கள், இயற்கை பொருட்கள் என ஐந்து வகையான உற்பத்தி பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீட்டு அங்கீகாரத்தை வழங்கி வருகிறது. மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு ஆனது வழங்கப்பட்டு வரும் நிலையில் அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடுகளை பெற்றிருக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
மதுரை மல்லி ,திண்டுக்கல் பூட்டு ,காஞ்சிபுரம் பட்டு ,ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ,சேலம் சுங்குடி சேலை ,பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன . அதேபோல மணப்பாறை முறுக்கு , மார்த்தாண்டம் தேன், நகமம் காட்டன், மயிலாடி கற்சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம் , ஊட்டி வர்க்கி, கம்பம் பன்னீர் திராட்சை , ஆத்தூர் வெற்றிலை, சோழவந்தான் வெற்றிலை உள்ளிட்ட 11 பொருட்களுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. வீரமாங்குடி செடி புட்டா சேலை, திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சையில் அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.