திருச்செந்தூர்: 3 தற்காலிக பேருந்து நிலையங்கள், 20 வாகன நிறுத்துமிடங்கள் தயார்..!
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை காண வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த ஏதுவாக, 20 வாகன நிறுத்துமிடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், நாளை குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. 14 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் இந்த குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 1ம் தேதி முதல் காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்ட நிலையில், நடைபெற்று வருகின்றன. யாகசாலை வேள்வியில் சுமார் 150 சிவாச்சாரியார்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து வருகின்றனர். 
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளதை தொடர்ந்து திருச்செந்தூர் நுழைவாயிலில், கோவிலில் முகப்பு போன்ற வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. யாகசாலை திருக்கல்யாண மண்டபம், சண்முக விலாசம் கோயில் முன்புறம் உள்ள இடங்களில் என கோவில் முழுவதும் செவ்வாழை, பலாப்பழம், ஆரஞ்சு பழம், கரும்பு, பலாப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், சோழன், நுங்கு, இளநீர், வாழைப்பூ, வாழ குருத்து, வாழைக்கொலை, தட்டி அலங்காரம் என பல வகையான பழங்களாலும், வண்ண வண்ண பூக்களாலும் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

திருச்செந்தூருக்கு வரக்கூடிய பக்தர்கள் வாகனம் நிறுத்துவதற்கு தேவையான வாகன நிறுத்தங்கள் மற்றும் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளை இயக்க ஏதுவாக மூன்று தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோயில் சாலைகளில் 20,000 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 20 வாகன நிறுத்தங்களும் தயார் நிலையில் உள்ளது.
அதேநேரம் வாகன நிறுத்தத்தில் இருக்கக்கூடிய பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியை நேரலையில் காண ஏதுவாக எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாகன நிறுத்தும் இடங்களுக்கு அருகிலேயே அன்னதான கூடங்கள் மற்றும் கழிவறைகள், குடிநீர் என அனைத்து தேவைகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


