நாளை குடமுழுக்கு: பழங்கள் மற்றும் பூக்கள் தோரணங்களால் களைகட்டும் திருச்செந்தூர் முருகன் கோயில்..
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு, கோயில் முழுவதும் பல்வேறு பழங்களால் தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கிவரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் குடமுழுக்கு விழா, நாளை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. கடந்த 1ம் தேதி முதல் சிறப்பு யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்ட நிலையில், யாகசாலை வேள்வியில் சுமார் 150 சிவாச்சாரியார்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து வருகின்றனர்.
அத்துடன் நாள்தோறும் வேத பாராயணம், பன்னிரு திருமுறை, கந்தர் அனுபூர்தி போன்றவை தமிழில் வாசிக்கப்பட்டு வருகின்றன. 8000 சதுர அடி பரப்பளவில் தங்கத்தால் ஜொலித்து வரும் யாகசாலை மண்டபத்தில் தினசரி காலை, மாலை இரண்டு வேளையும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்றும் காலை மாலை இரு வேலைகளிலும் யாகசாலை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

குடமுழுக்கு நாளை அதிகாலை நடைபெறுகிறது என்பதால் இன்று முதலே ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகள் கூடுதலாக செய்யப்பட்டுள்ளன. கோயில் முன்புள்ள கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடி அதன் அருகில் உள்ள நாழிக்கணத்திலும் குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கோவில் யானை தெய்வானையிடம் பெரியவர்கள் வரை சிறியவர்கள் வரை யானை தெய்வானையிடம் பக்தர்கள் ஆசிர்வாதம் வாங்கி மகிழ்ந்தனர். பிரம்மாண்டமான யாகசாலை முன்பு நாதஸ்வர இசையும், இசை வாத்தியங்களும் இசைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவிலில் செவ்வாழை, பலாப்பழம், ஆரஞ்சு பழம், கரும்பு, பலாப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், சோழன், நுங்கு, இளநீர், வாழைப்பூ, வாழ குருத்து, வாழைக்கொலை, தட்டி அலங்காரம் என பல வகையான பழங்களாலும், வண்ண வண்ண பூக்களாலும் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. யாகசாலை திருக்கல்யாண மண்டபம், சண்முக விலாசம் கோயில் முன்புறம் உள்ள இடங்களில் எல்லாம் தோரண அலங்காரங்கள் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருகிறது. குடமுழுக்கை ஒட்டி கோவிலில் செய்யபப்ட்டுள்ள அலங்காரங்கள் பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


