அதிவிரைவு ரயிலாக மாற்றப்படுகிறது திருச்செந்தூர் ரயில்..

 
ரயில்

சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் விரைவு ரயில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை எழும்பூர் -  திருச்செந்தூர் இடையே விரைவு ரயில் ( எண் 16105/ 16106 ) தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றப்படும் நிலையில் இந்த ரயிலின் (எண் 20605/ 20606 ) ஆக மாற்றப்படும்.

ரயில் சேவை

மேலும் இந்த ரயில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து வழக்கமாக புறப்படும் நேரம்  பிற்பகல் 4.05 மணிக்கு பதிலாக,  4. 10 மணிக்கு  ( 5  நிமிடம் தாமதமாக)  புறப்பட்டு மறுநாள் காலை 6.50 மணிக்கு பதிலாக 6.10  மணிக்கு ( 40 நிமிடங்கள் முன்பாவே )  திருச்செந்தூர் சென்றடையும்.  மறுமார்க்கமாக ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் திருச்செந்தூரிலிருந்து வழக்கமாக புறப்படும் நேரம் இரவு 8.10 மணிக்கு பதிலாக,  8:25 மணிக்கு 15 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு,  மறுநாள் வழக்கம் போல் காலை 10:25 மணிக்கு எழும்பூர் வந்தடையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.