"திருவாரூர் முத்துவேல் கருணாநிதி" நூல் வெளியீட்டு விழா - முக்கிய அறிவிப்பு!!
சென்னை அண்ணா அறிவலாயத்திலுள்ள கலைஞர் அரங்கில் "திருவாரூர் முத்துவேல் கருணாநிதி" நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
இதுகுறித்து திமுக எம்எல்ஏ எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்ச் சமுதாயம் முன்னேறவும், சுயமரியாதை தழைத்தோங்கும் மாநிலமாக தமிழகம் சிறந்து நிற்கவும் தன் உடல், பொருள், ஆவி அத்தனையையும் துறந்து போர்க்களம் கண்ட பெரும்போராளி தலைவர் கலைஞர். அவருக்கு முன்னும் பின்னும் அவரையொத்த தலைவர்கள் இருந்தனர். எனினும், தன் மாணவப் பருவத்திலேயே சமூகப் பிரச்சனைகளுக்காக எழுத்து ஆயுதம் ஏந்தி தன் இறுதிக்காலம் வரை, மிக நீண்ட நெடிய காலம் தன் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளாமல் போராடி அந்த போர்க்களத்தில் வெற்றி எனும் பூ, பூப்பதைத் தன் காலத்திலேயே கண்டு மறைந்தவர் தலைவர் கலைஞர்.
'திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்!' எனது எழுத்துப் பணியில் இரண்டாவது நூல். இந்தியாவின் தன்னிகரற்றத் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுஞாயிறு, கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்திலும் இல்லங்களிலும் மறைந்தும் மறையாமல் வாழ்ந்துவரும் கலைஞர் அவர்கள் குறித்த எனது நூல்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நேர்காணல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி பதில்களின் மூலம் கலைஞர் அவர்களின் வாழ்வும், நினைவும் இளைய தலைமுறையினரின் நெஞ்சில் நிலைக்கொள்ளும் வகையில் நூலாக தொகுத்துள்ளேன்.
வரும் 07-10-2022 வெள்ளிக்கிழமை அன்று மாலை 06.00 மணியளவில், சென்னை அண்ணா அறிவலாயத்திலுள்ள கலைஞர் அரங்கில், கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வாழ்த்துரை கொண்ட இந்நூலினை, கழக இளைஞர் அணிச் செயலாளர், இளந்தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட, மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பெற்றுக் கொள்கிறார். அவ்வமயம், நக்கீரன் ஆசிரியர் திரு. நக்கீரன் கோபால் அவர்களும், திரைப்பட இயக்குநர் திரு. கரு. பழனியப்பன் அவர்களும் வாழ்த்துரை வழங்குகின்றனர். நிகழ்ச்சியில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக முன்னணியினர் மற்றும் சீர்மிகு பெருமக்கள் பங்கேற்க இசைவு தெரிவித்துள்ளனர்.இந்த நூல் வெளியீடு சம்பந்தப்பட்ட தகவல்களை சமூகவலைதளங்களின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
பின்வரும்ட்விட்டர்: @Ezhilarasancvmp, @dmk_studentwing முகநூல்: https://www.facebook.com/EzhilarasanCVMP இன்ஸ்டாகிராம்: cvmp_ezhilarasan & dmk_studentswing
நடைபெறவுள்ள நூல் வெளியீடு குறித்த செய்தியினை தங்கள் மேலான பத்திரிக்கை / ஊடகங்களில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், நூல் வெளியீடு நிகழ்வுகளில் தாங்கள் கலந்துக் கொண்டு எங்களை சிறப்பிக்குமாறும், அங்கு பகிரப்படும் கருத்துக்களை விரிவாக செய்திகளாய் தங்கள் மேலான பத்திரிக்கை / ஊடகங்களில் வெளியிடுமாறும், எனதருமை பத்திரிக்கை / ஊடக நண்பர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.