“ஜாகிர் உசேன் கொலை வழக்கில் சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது”- மு.க.ஸ்டாலின் உறுதி
“ஜாகிர் உசேன் கொலை வழக்கில் சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது”- மு.க.ஸ்டாலின் உறுதிசட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என ஜாகிர் உசேன் கொலை வழக்கு தொடர்பாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

நெல்லை டவுண் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி(வயது 60). இவர் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி கடந்த 2009-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார். தற்போது அவர் நெல்லை டவுண் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் முத்தவல்லியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலிக்கும், டவுண் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற தவுபிக்(34) என்பவருக்கும் இடையே தொட்டிப்பாலம் தெரு பகுதியில் பிரதான சாலையில் உள்ள ஒரு இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினையில் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்ட நிலையில், நேற்று ஜாகீர் உசேன் பிஜிலி அதிகாலையில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது காட்சி மண்டபம் அருகே வைத்து கிருஷ்ணமூர்த்தி, அவரது உறவினர்கள் 2 பேர் சேர்ந்து கொலை செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசேன் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ் மற்றும் விசிக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தன.

இந்நிலையில் ஜாகிர் உசேன் கொலை வழக்கு தொடர்பாக பேரவையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசேன் கொலை வழக்கில் இருவர் சரண் அடைந்துள்ளனர். பிற குற்றவாளிகளை தனிப்படை அமைத்து போலீஸ் தேடி வருகின்றனர். ஜாகிர் உசேனுக்கும் தவ்ஹீத் என்பவருக்கும் ஏற்கனவே நிலம் தொடர்பான பிரச்னை இருந்து வந்துள்ளது. தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஜாகிர் உசேன், கடந்த 8ம் தேதி காணொலி வெளியிட்டதைத் தொடர்ந்து எதிர் தரப்பை அழைத்து விசாரணை நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில்தான் நேற்று கண்டிக்கத்தக்க சம்பவம் நடந்துள்ளது 5 இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி, இதில் தொடர்புடைய அனைவரும் பாரபட்சமின்றி நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள். சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது” என்றார்.


