நாங்குநேரி மாணவனை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை!

 
Annamalai

நாங்குநேரில் சாதிய மோதல் காரணமாக சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

இது தொடர்பாக அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவில், பள்ளி மாணவர்களிடையே ஜாதியப் பிரச்சினை காரணமாக, சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பன்னிரண்டாவது வகுப்பு படிக்கும் மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி இருவரையும், மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறினோம். அவர்களுக்குக் கொடுக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோம். நன்றாகப் படித்து, ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெற்ற மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கை இருவரும், வருங்காலத்தில், சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் வருவதற்கு தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டோம். 


தேசத்தின் எதிர்கால தூண்களான மாணவ சமுதாயம், நன்கு கல்வி கற்று, ஜாதி மத பேதமின்றி அனைவரும் சமம் என்ற எண்ணத்தோடு உயரிய சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.