நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவு : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்...
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரில் நளினியும் ஒருவர். 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தொடர் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
7 பேர் விடுதலை தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஆளுநர் எழுவர் விடுதலை குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை.. பின்னர் தண்டனை குறைப்பு குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என, தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என வாதிடப்பட்டதைத் தொடர்ந்து நளினியின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சிறையில் உள்ள தனது மகளை பரோலில் விடுவிக்க வேண்டும் என நளினியின் தாயார் பத்மா, முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்தார். வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறேன், என் இறுதி காலத்திலாவது மகள் நளினி என்னுடம் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன் என்று உருக்கமாக கேட்டிருந்தார்.
மேலும் 31 ஆண்டுகள் சிறைவாசத்தால் நளினி மன அழுத்தம் , உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார். எனவே மனிதநேய அடிப்படையில் வருக்கு பரோல் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார். இதனையடுத்து தற்போது நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னாவின் விளக்கத்தையேற்று நளினி தாயார் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.