தமிழகத்தில் இன்றும், நாளையும் கொரோனா சிகிச்சை ஒத்திகை நடைபெறவுள்ளது - அமைச்சர் தகவல்

 
Ma subramanian

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய வகையின் பாதிப்பு வீரியமாக இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தின் கொரோனா பரவல் நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதுகுறித்து அமைச்சர் பதிலளித்து பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள 11,000 அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டமைப்புகள் குறித்த ஒத்திகை இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.  அரசு சார்பில் 78 இடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மையங்கள் தயார்நிலையில் உள்ளன. சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் தென்படுவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மருந்து இருப்பு, படுக்கை வசதி உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. 

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய வகையின் பாதிப்பு வீரியமாக இல்லை. தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தேவை என்ற நிலை தற்போது இல்லை. தமிழகத்தில் கிளஸ்டர் பாதிப்பு இல்லை. தனித்தனியே பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் 64,281 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 24,500 ஆக்சிஜன் வெண்டிலேட்டர்கள் உள்ளன. 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.