இன்று எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள்: அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் இ.பி.எஸ்..!

 
1 1

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர், 'பாரத் ரத்னா' டாக்டர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாளான இன்று (17.1.2026) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள, எம்.ஜி.ஆருடைய திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுகின்றனர்.

அதே போல், எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான இன்று, எம்.ஜி.ஆருடைய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும், தங்கள் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆருடைய திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும்; ஆங்காங்கே எம்.ஜி.ஆருடைய திருஉருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.