எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..
தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் ஆன்லைனில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் தொடங்கிநடைபெற்று வருகிறது. www.tnhealth.tn.gov.in மற்றும் www.tn medicalselection.org ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணியுடன் விண்ணப்பிப்பது நிறைவடைய இருந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 12-ம் தேதி அதாவது இன்று மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இன்று மாலை 5 மணியுடன் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு நிறைவடைய உள்ளதால், இதுவரை விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) கேட்டுக்கொண்டுள்ளது. இதுவரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுமார் 22,500 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுமார் 9,500 பேரும் என மொத்தம் 32,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, வரும் 16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.