மெட்ரோ ரயிலில் அதிகம் பயணித்தவர்களுக்கு பரிசு!!

 
tn

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பயணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில் சேவைகளைப் பயன்படுத்தி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு ஆதரவளித்து வரும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மெட்ரோ இரயிலில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000/- மதிப்புள்ள பரிசு பொருளை வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மார்க் மெட்ரோ உடன் இணைந்து இந்த பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இதன்படி, நடப்பாண்டில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் அதிகபட்சமாக பயணம் செய்த 30 பயணிகளுக்கு தலா ரூ.2,000/- என ரூ.60,000/- மதிப்புள்ள பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (14.07.2023) செனாய் நகர் மெட்ரோ இரயில் நிலையம் திரு.வி.க.பூங்காவில் நடைபெற்றது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர். பிரசன்ன குமார் ஆச்சார்யா (நிதி) முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வின் போது பிரபல பாடகர் திரு.எம்.ஜே.ஸ்ரீராமின் இசை நிகழ்ச்சியையும் நடைபெற்றது.

tn

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் (தொடர்வண்டி மற்றும் இயக்கம்). கூடுதல் பொது மேலாளர் எஸ். சதீஷ்பிரபு (தொடர்வண்டி மற்றும் இயக்கம்). இணை பொது மேலாளர் வி.விஜயவரதன் (இயக்கம்). மேலாளர்கள் பி. லட்சுமி (வருவாய்). கே.எஸ்.அருண் (இயக்கம்) மற்றும் அல்தாப் உசேன் (இயக்கம்), மார்க் மெட்ரோ நிறுவனத்தின் இயக்குநர் வி.கே.இளங்குமணன், பொது மேலாளர் சீனிவாசன், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

tn

பொதுமக்கள் மற்றும் மெட்ரோ இரயில் பயணிகள் அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து இந்நிகழ்ச்சியினை கண்டு களித்தனர்.