“நேரில் ஆஜராக வேண்டும்”- சீமானுக்கு திருச்சி நீதிமன்றம் உத்தரவு

 
seeman seeman

சீமானுக்கு எதிராக திருச்சி டி.ஐ.ஜி தாக்கல் செய்த அவதூறு வழக்கு விசாரணை இன்று நடந்த நிலையில் வழக்கு விசாரணையை மீண்டும் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

seeman

திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார்  மற்றும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசியிருந்தார். இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4 நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கு விசாரணைக்காக சீமான் கடந்த மாதம் எட்டாம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதி விஜயா உத்தரவிட்டிருந்தார். உத்தரவின் அடிப்படையில் சீமான் எட்டாம் தேதி ஆஜரானார். அதேபோல வழக்கை தாக்கல் செய்த டிஐஜி வருண் குமாரும்  ஆஜரானார். வழக்கு குறித்த ஆவணங்களை சீமான் தரப்பு வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார். அந்த ஆவணங்கள் சீமான் தரப்பில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா வழக்கு விசாரணையை  ஏப்ரல் 29ஆம் தேதிக்கு
ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதன்படி அந்த வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டது. விசாரணைக்காக திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் நீதிபதி விஜயா முன்னிலையில் நேரில் ஆஜரானார். சீமான் தரப்பில் அவரின் வழக்கறிஞர்கள் ஆஜராகி எழுத்துப்பூர்வமான வாதங்களை முன் வைத்தனர். அந்த வாதத்தின் நகல்களை வருண் குமார் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா மீண்டும் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.