கூடிய விரைவில் அண்ணாமலையின் பொய் பிம்பம் உடையும் - சூர்யா சிவா

 
Surya siva

கூடிய விரைவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பொய் பிம்பம் உடையும் என சூர்யா சிவா குறிப்பிட்டுள்ளார். 
 
திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவர் தமிழக பாஜகவின் ஓ.பி.சி. பிரிவின் மாநில செயலராக இருந்து வந்தார். பாஜக சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணும், சூர்யா சிவாவும் அலைபேசியில் மோதிக் கொண்ட ஆடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. அந்த ஆடியோவில் சூர்யா சிவா, டெய்சி சரணை தகாத வார்த்தைகளில் பேசியது தெரிய வந்ததை தொடர்ந்து, அவரை ஆறு மாத காலத்திற்கு தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடவடிக்கை மேற்கொண்டார்.  இதனை தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக சூர்யா சிவா அறிவித்தார். இருப்பினும் அவர் வேறு எந்த கட்சிக்கும் செல்லாமல் இருந்து வந்தார். 


இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் குறித்து சூர்யா சிவா வெளியிட்டுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கட்சியை விட்டு வெளியில் வந்தாலும் அண்ணாமலை பற்றி நான் விமர்சனம் செய்யாமல் தான் இருந்தேன். வாழ்க்கையில் ஒரு விஷயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் உண்மையாக இருப்பதைவிட யாரிடம் உண்மையாக இருக்கிறோம் என்பது மிக முக்கியம். நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் முதலில் உணர வேண்டும். நான் அப்படிப்பட்ட ஒரு நபர் அண்ணாமலை என்று நினைத்தேன் ஆனால் அது பொய் என்று தெரிந்து விட்டது. கூடிய விரைவில் அவருடைய பொய் பிம்பம் உடையும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.