"நேர்மறை சிந்தனைகளோடும், நம்பிக்கையோடும் உழைப்பவர்களுக்கு உயர்வு நிச்சயம்" - டிடிவி தினகரன் வாழ்த்து!!

 
ttv

ஆயுத பூஜை , விஜயதசமி பண்டிகையையொட்டி டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "உழைப்பின் சிறப்பையும், தொழிலின் மேன்மையையும் சொல்லும் ஆயுத பூஜை மற்றும் வெற்றித்திருநாளான விஜயதசமியைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

TTV

தாயாய் உலகைக் காத்திடும் அன்னை பராசக்தியை, நாம் வீரத்தோடு விளங்கிட துர்க்கை வடிவில் மூன்று நாட்களும், செல்வம் பெருகிட லட்சுமி வடிவில் மூன்று நாட்களும், கல்வியிலும் கலைகளிலும் சிறந்திட சரஸ்வதி வடிவில் மூன்று நாட்களும் வழிபடுவது நவராத்திரியின் சிறப்பாகும். இதன் நிறைவில் அவரவருக்கு வாழ்வளிக்கிற தொழிலைப் போற்றி வணங்கிடும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதைப் போன்றே விஜயதசமி அன்று தொடங்கும் நற்செயல்கள் வெற்றிமுகமாகும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை.

இந்நன்னாளில் அனைத்து தொழில் செய்பவர்களும் இன்னல்களிலிருந்து மீண்டெழுந்து 'இனி எல்லாம் நலமே' என்கிற அளவிற்கு நன்மைகளைப் பெற்றிட வாழ்த்துகிறேன். 'உழைப்புதான் இந்த உலகை இயக்குகிற உன்னத சக்தி' என்பதை நிரூபிக்கும் விதமாக உழைப்பவர்கள் அனைவரும் உயர்ந்திட வேண்டுமென அன்னை பராசக்தியை வேண்டுகிறேன்.

TTV DHINAKARAN
    
தீயசக்திகளை எந்நாளும் உறுதியோடு எதிர்த்து நின்று, நேர்மறை சிந்தனைகளோடும், நம்பிக்கையோடும் உழைப்பவர்களுக்கு உயர்வு நிச்சயம் எனும் எண்ணத்தோடு, அனைவரும் வளமும் நலமும் பெற்று, ஆனந்தமாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன்...! " என்று குறிப்பிட்டுள்ளார்.