"இயலாமையை மறைக்க அடிமை ராகம் பாடும் ஸ்டாலின்" : டிடிவி தினகரன் கடும் தாக்கு!!

 
TTV STALIN

 "மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருக்கிறோம்" என்று புதிய வேஷம் கட்டுவது திமுகவின் வழக்கமாக இருக்கிறது என்று தினகரன் விமர்சித்துள்ளார். 

stalin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் 14வது மாநில மாநாட்டில் கலந்துகொண்டார்.  சென்னை மாதவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், "நான் எப்போதுமே அதிகம் பேசமாட்டேன். செயலில் நம்முடைய திறமையை காட்ட வேண்டும். அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கம் இல்லை . திமுக ஆட்சியின் போதெல்லாம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முன்னேற்றத்திற்கான ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசாங்க கஜானாவிற்கு வரவேண்டிய சரக்கு மற்றும் சேவை வரியை மொத்தமாக மத்திய அரசு பறித்துக் கொண்டு விட்டது.  நிதி நிலைமை பொறுத்தவரை மத்திய அரசிடம் கொத்தடிமை போல கையேந்தும் நிலைமையில்தான் மாநிலங்கள் இருக்கின்றன.  ஜிஎஸ்டி முதல் வெள்ள நிவாரண நிதி வரைக்கும் நமக்கு தர வேண்டிய விதிகளை முழுமையாக தரப்படுவதில்லை. தரப்படும் நிதியும் உரிய நேரத்தில் வழங்கப்படுவது இல்லை" என்றார்.

TTV DHINAKARAN
இந்நிலையில்  இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, "அதைச் செய்து விடுவோம் இதைச் செய்து விடுவோம்" என வீராவேசமாக பேசிவிட்டு  பதவிக்கு வந்தபிறகு, "மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருக்கிறோம்" என்று புதிய வேஷம் கட்டுவது தி.மு.கவின் வழக்கமாக இருக்கிறது. இவர்களின் இயலாமையை மறைக்க அன்றைக்கு திரு.கருணாநிதி செய்ததை இப்போது திரு. ஸ்டாலினும் செய்கிறார். அரசு ஊழியர் சங்க மாநாட்டில் இப்படி ஓர் அடிமை ராகத்தை அவர் இசைத்திருக்கிறார். அரசாங்கத்திற்கு 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பது தேர்தல் நேரத்தில் இஷ்டப்படி வாக்குறுதிகளை அள்ளி வீசிய  போது திரு.ஸ்டாலினுக்குத்  தெரியாதா?  தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பு மட்டுமின்றி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 40க்கும் மேற்பட்ட எம்.பிக்களை வைத்திருக்கிற ஒரு கட்சியின் தலைவர் இப்படி சுய பச்சாதாபம் தேடி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்க  முயற்சிக்கலாமா? “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, தமிழ்நாட்டிலே“என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் படத்தின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது" என்று விமர்சித்துள்ளார்.