"வெறுப்புணர்வை நீக்கி வேற்றுமையில் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவோம்" - தினகரன் வாழ்த்து!!

 
ttv dhinakaran

நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தையொட்டி டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அறவழியிலான போராட்டத்தின் மூலம் ஜனநாயகத்தை வென்றெடுத்தவர்கள் நாம் என்ற பெருமையைக் கொண்ட இந்திய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். 

அடக்குமுறை ஆட்சியால் மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற ஜனநாயக முறையிலான போராட்டமே தீர்வு என்பதை உலகுக்கே உணர்த்திக் காட்டியது இந்திய சுதந்திரப் போராட்டம். 

TTV

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எழுச்சி மிக்க போராட்டங்களை முன்னெடுத்து இறுதியாக சுதந்திரத்தை வென்றதன் மூலம்  இனம், மொழி, மாநிலம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து ஒன்றுபட்டிருந்தால் உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்பதையும் உலகத்துக்கு எடுத்துக்காட்டியது இந்தநாள்தான். 

இன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அன்று போர்களங்களும், போராட்டங்களும் கண்டு தங்களது இன்னுயிரை நீத்த சுதந்திரப் போராட்ட வீரர்களையும், தியாகிகளையும் இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம். 

ttv

மேலும், இப்போதைய காலகட்டத்தில் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் வெறுப்புணர்வை நீக்கி சகிப்புத்தன்மையை வளர்த்தெடுத்து வேற்றுமையில் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவோம் என இந்த சுதந்திரதினத்தில் உறுதி ஏற்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.