அமமுக தேர்தல் கூட்டணி இந்த மாத இறுதியிலோ, ஜனவரியிலோ அறிவிக்கப்படும் - டிடிவி தினகரன்

 
ttv dhinakaran

அமமுக தேர்தல் கூட்டணி குறித்து இந்த மாத இறுதியில் அல்லது ஜனவரியில் முடிவு அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Image

மதுரை மற்றும் நெல்லை மண்டல அமமுக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மதுரை பாண்டியன் ஹோட்டலில் உள்ள அரங்கில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக புறப்பட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  மதுரை கோச்சடை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய டிடிவி தினகரன், “அமமுக தேர்தல் பொறுப்பாளர்களுடன் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக கன்னியாகுமரி முதல் திண்டுக்கல் வரையிலான 59 சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அமமுகவின் தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரியிலோ முடிவாகும். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. அதனால் பன்னீர்செல்வம்  எங்களோடு பணியாற்றி வருகிறார் . எங்களோடு வருபவர்கள் அனைவரோடும் சேர்ந்து பணியாற்றுவோம். 

தலைமைச் செயலாளர் அறிக்கைப்படி 90 சதவீதத்திற்கு மேல் சென்னை சகஜ சூழ்நிலை திரும்பிவிட்டது. மற்ற ஏரியாக்களிலும் திரும்பிவிடும் என கூறியிருக்கிறார், அதன்படி நடக்கும் என நம்புகிறேன். கடல்நீரில் கலந்த எண்ணெயை அகற்றுவதற்கான உரிய உபகரணங்களை கொண்டு அதனை நீக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். மத்திய அரசு நாட்டுக்கும் பாராளுமன்றத்திற்கும் சிறந்த பாதுகாப்பை வழங்கவேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. திமுக ஆட்சி தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றாத மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சியாக போய்க்கொண்டிருக்கிறது. அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் என திமுக தேர்தல் வாக்குறுதிஅறிவித்தார்கள் ஆனால் தற்போது அப்படி பண்ணவில்லை. தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைடதொகை அறிவிப்பேன் என சொல்லியதை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை” என்றார்.