ஜெயலலிதாவின் தொண்டனாக செங்கோட்டையன் கூறியது சரிதான்; அவரது கருத்தை நான் ஏற்கிறேன்"- டிடிவி தினகரன்
புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய டிடிவி தினகரன், “ஜெயலலிதாவின் படமோ, எம்ஜிஆர் படமோ இடம் பெறாத காரணத்தால் அத்திக்கடவு அவிநாசி திட்ட பாராட்டு விழாவுக்கு நான் செல்லவில்லை என்று ஜெயலலிதாவின் தொண்டனாக செங்கோட்டையன் கூறியுள்ளது சரியானது தான். எம்ஜிஆர் கட்சி ஆரம்பத்திலிருந்து கட்சியில் இருப்பவர் செங்கோட்டையன். அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகி அவர் அவரது ஆதங்கத்தை கூறியுள்ளார். அவரது கருத்தை நானும் ஜெயலலிதாவின் தொண்டனாக ஏற்கிறேன். 2021ல் தேர்தலில் பண பலம், அதிகார பலம், கூட்டணி பலம் இருந்தும் எதனால் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா கொடுத்த ஆட்சியை தக்கவைக்க முடியவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு வந்த அனைத்து தேர்தலிலும் அதிமுக தோல்வியை தான் சந்தித்துள்ளது அந்த தோல்விக்கான காரணமும் அனைவருக்கும் தெரியும்.
2021ல் திமுக ஆட்சி அமைத்ததற்கும், 2024ல் திமுக வெற்றி பெறுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக உதவி செய்துள்ளார். தன் மீது வழக்குகள் வந்துவிடக்கூடாது கைதாகி விடக்கூடாது என்பதற்காக தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு அதிமுகவை கேடயமாக பயன்படுத்திக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறார். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவிற்கு மூடு விழா நடத்தி விடுவார் நான் பலமுறை தொடர்ந்து சொல்லி வருகிறேன். அதை அங்குள்ள தொண்டர்கள் உணர வேண்டும். நிர்வாகிகள் உணர வேண்டும் இரட்டை இலையையும், பண பலத்தையும் எடப்பாடி பழனிச்சாமி வைத்துள்ளார் என்று எண்ணி அவருக்கு காவடி தூக்க நினைத்தீர்கள். அப்படி என்றால் 2026 தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதாவின் தொண்டர்கள் வருத்தப்படக்கூடிய நிலை வந்துவிடும், அதனால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஒரு அணியில் திரள வேண்டும் என்று நான் தொடர்ந்து கூறி வந்தேன். அதை வெளிப்படுத்தும் விதமாகத்தான் செங்கோட்டையனின் கருத்து இருப்பதாக நான் எண்ணுகின்றேன்.

எடப்பாடி பழனிச்சாமி அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை கொண்டு வரவில்லை. ஜெயலலிதா கொண்டு வந்த ஆட்சியின் நீட்சியாகத்தான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. அதனால் ஜெயலலிதா படத்தை போட வேண்டும் என்பது அடிப்படை. ஒரு கட்சி வாங்கிய வாக்குகளை விமர்சனம் செய்வது நன்றாக இருக்காது. அதே நேரத்தில் சீமான் கடந்த ஆண்டுகளில் எல்லாம் பெரியாரை பற்றி எப்படி எல்லாம் புகழ்ந்து பேசினார், இன்று அந்தர் பெல்ட்டி அடித்து பெரியார் போன்ற மிகப்பெரிய மறைந்த தலைவர்களை எல்லாம் சீமான் இழிவாக பேசுவது அரசியல்வாதியான எனக்கு கூட வெட்கக்கேடாக இருக்கிறது. சீமான் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொண்டு பேசக்கூடாது” என்றார்.


