விநாயகர் சதுர்த்தி திருநாள் - டிடிவி தினகரன் வாழ்த்து!!
விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு தினகரன் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாழ்வில் வினைகளைத் தீர்த்து, வெற்றிகளைத் தந்திடும் விநாயகப்பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லா கடவுளுக்கும் முதன்மையானவராக, ஆலயங்களில் முதலில் வழிபடக்கூடியவராக இருந்தாலும் மண்ணோ, மஞ்சளோ, சாணமோ எதில் பிடித்து வைத்து வழிபட்டாலும் அருள்புரிகிற எளிமையின் சிகரமாக இருப்பதே விநாயகரின் பெரும் சிறப்பு. வாழ்வில் எத்தனை உயரத்திற்குப் போனாலும் எளிமையாகவும், எல்லாருக்கும் பிடித்தமானவராகவும் இருக்க வேண்டும் என்பதை பிள்ளையாரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.
எளிமை மட்டுமின்றி அன்பு காட்டுதல், அரவணைத்தல், பெற்றோரை மதித்தல் என விநாயகர் வழிபாட்டில் இருந்து நாம் பின்பற்ற வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. இந்த நன்னாளில் உலகெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கவும், மக்களுக்கு உள்ள சங்கடங்களை எல்லாம் சரி செய்யவும் முழு முதற்கடவுளான விநாயகரின் அருள் துணை நிற்கட்டும். ஆரோக்கியமும் ஆனந்தமும் ஒவ்வொருவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நிறையட்டும் என வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.