அரசுப் போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்க துடிப்பதா? - டிடிவி தினகரன் கண்டனம்
ஆளுங்கட்சி தொழிற்சங்கம் உட்பட அனைத்து தொழிற்சங்கத்தினரின் கடும் எதிர்ப்பை மீறி மீண்டும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தனியார் நிறுவனம் மூலம் பணியாளர்களை நியமிக்க முன்வந்திருக்கும் போக்குவரத்துத் துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் உள்ள 32 பணிமனைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்ப தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணையை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
கடந்த முறை தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பணிமனைக்குள் மட்டுமே பணி வழங்கப்படும் என கூறிய போக்குவரத்துத்துறை தற்போது வெளியிட்டிருக்கும் அறிவிப்பாணையில் பேருந்துகளை இயக்குவதற்கான பணி என குறிப்பிடப்பட்டிருப்பது போக்குவரத்துத்துறையை முற்றிலுமாக தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கை என தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆளுங்கட்சி தொழிற்சங்கம் உட்பட அனைத்து தொழிற்சங்கத்தினரின் கடும் எதிர்ப்பை மீறி மீண்டும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தனியார் நிறுவனம் மூலம் பணியாளர்களை நியமிக்க முன்வந்திருக்கும் போக்குவரத்துத் துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) October 2, 2023
சென்னையில் உள்ள 32 பணிமனைகளில்…
போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பதிவு செய்து காத்திருக்கும் சூழலில், அவர்களின் கனவை சிதைத்துவிட்டு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை அவசரம் அவசரமாக நியமிப்பது ஏன்?திமுக ஆட்சிக்கு வந்த பின் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விட்டிருப்பதோடு, தற்போது போக்குவரத்து கழகங்கள் முழுவதையும் தனியாருக்கு தாரைவார்க்க முயற்சிப்பது ஆளும் திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கையே காட்டுகிறது.
எனவே, தனியார் நிறுவனம் மூலம் பணியாளர்களை நியமிப்பதற்காக ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணை திரும்பப் பெறுவதோடு, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்காக பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களைக் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.