தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள 2 தமிழக ஆசிரியர்கள் - டிடிவி தினகரன் வாழ்த்து
தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள 2 ஆசிரியர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாப்பட்டு வருகிறது. இந்த நாளில் மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் என்பவரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்…
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 27, 2023
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள 2 ஆசிரியர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு இது போன்ற விருதுகள் மேலும் உத்வேகத்தை அளிக்கும். ஆசிரியர் பணியில் மேலும் சிறப்பாகச் செயல்பட்டு அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என வாழ்த்துகிறேன்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.