துரோகிகளை பற்றி டெல்லியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள் - டிடிவி தினகரன்

 
ttv dhinakaran

ஒரு சிலரின் ஆணவத்தால், அகங்காரத்தால், பணத்திமிரால் அம்மாவின் இயக்கம் இன்று பலவீனப்பட்டு உள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருவாரூரில் இன்று நடைபெற்ற சசிகலாவின் உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ஒரு சிலரின் ஆணவத்தால், அகங்காரத்தால், பணத்திமிரால் அம்மாவின் இயக்கம் மிகவும் பலவீனப்பட்டு வருகிறது. ஒரு சில சுயநலவாதிகளால் தமிழகம் பாழடைந்து விட்டது. அவர்கள் செய்த தவறுகளால் தான், தீய சக்தியான தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் தான் இன்றைக்கு தவறான நடவடிக்கைகளில் சட்டசபையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  அம்மாவினுடைய கட்சி, அம்மாவின் தொண்டர்கள் பலர் தவறான பதவி வெறியால், நடைபெறும் பதவி சண்டைகளை பார்த்து வருத்தத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அம்மாவினுடைய இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் என்பதை உணரும் காலம் விரைவில் வரும். துரோகிகளை பற்றி டெல்லியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். துரோகிகள் தான் என்பதை அவர்களும் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். 

குறிப்பிட்ட சில நபர்களை வைத்து வைத்துக்கொண்டு கட்சியை விட்டு யாரையும் நீக்கிவிடக்கூடாது என்பதற்காக தான் தொண்டர்கள் சேர்ந்து கட்சியின் தலைமை பதவியான பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தலைவர் காலத்தில் விதி இருந்தது. அந்த விதியை பழனிசாமி மாற்றி யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பதை மாற்றி 20 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு வேண்டும் என்று தலைவரின் விதியையே மாற்றி அமைத்துவிட்டார்கள். துரோகம் செய்தவர்களுக்கு வெகு விரைவில் மக்களும் தொண்டர்களும் தீர்ப்பு தருவார்கள். இவ்வாறு கூறினார்.