“2026 தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக ஒன்றிணைய வாய்ப்புள்ளது”- டிடிவி தினகரன்
பெரியாரைப் பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு எந்த அரசியல்வாதிக்கும் தகுதி இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி தெற்கு மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செயல் வீரர்களின் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் தேனி தெற்கு மாவட்ட நிர்வாகிகள், கம்பம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “2026 தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக ஒன்றிணைய வாய்ப்புள்ளது. அது With or Without எடப்பாடி பழனிசாமி என்பதை அதிமுக தொண்டர்கள் முடிவு செய்வார்கள். திருப்பரங்குன்றத்தை பிரச்சனையில் மாவட்ட ஆட்சித் தலைவர், அமைச்சர்கள் என அனைவரும் தலையிட்டு சுமுகமான தீர்வை கொண்டு வந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் சகோதரர் நோக்கத்துடன் பழகும் இந்து முஸ்லீம்களிடம் பிரச்சனைகளை திமுக அரசு தான் ஏற்படுத்தி உள்ளது. மேலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியினர் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். அதற்கு தேர்தல் ஆணையம் சின்னம் பற்றிய விசாரணையில் தலையிடலாம் என தீர்ப்பு அளிக்கப்பட்டதற்கு இது எங்களின் வெற்றிக்கு முதல் தொடக்கம். இந்த உலகத்தில் அம்மா மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நிகராக யாருமே கிடையாது என்றார்.

இதனை எடுத்து அத்திக்கடவு நிகழ்ச்சியை செங்கோட்டையன் புறக்கணித்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு வித்திட்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இந்த விஷயத்தில் செங்கோட்டையன் அவர்கள் எடுத்திருப்பது அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு விஷயமாகும். தந்தை பெரியாரை பற்றி பேசுவதற்கு எந்த ஒரு அரசியல்வாதிக்கும் அருகதை கிடையாது. தங்களுடைய சுய விளம்பரத்திற்காக ஒரு சிலர் அவரைப் பற்றி அவதூறுகளாக பேசி வருகிறார்கள்” என்று கூறினார்.


