மீண்டும் விஜய் CBI விசாரணைக்கு ஆஜாராவார்! விசாரணையில் நடந்தது என்ன?- நிர்மல்குமார் பேட்டி
ஜனநாயகன் திரைப்படம் குறித்து யார் யார் ஆதரவு தெரிவித்தார்களோ அனைவருக்கும் தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டமானது அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது. கரூர் பிரச்சார கூட்டத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜயிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதனை ஏற்று நேற்றயை தினம் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். தவெக தலைவர் விஜய் உடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் தவெகவின் இணைப்பொதுச்செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் சிபிஐ அலுவலகம் சென்றனர்.
இந்நிலையில் சிபிஐ விசாரணை முடிந்து டெல்லியில் இருந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனி விமானம் மூலமாக சென்னை விமான நிலையம் திரும்பினார். அங்கு இருந்து அவர் நீலாங்கரை இல்லத்திற்கு சென்றார்.அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், டெல்லியில் நேற்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தோம். வேறு ஒரு தேதியில் மீண்டும் சிபிஐ விசாரணைக்கு தலைவர் ஆஜர் ஆவார். தற்போது தலைவரின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் குறித்தான ஆலோசனை கூட்டம் இருக்கிறது. அதனால் வேறு ஒரு நாளில் மீண்டும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் ஆஜர் ஆவார் எனவும் மேலும் தேர்தல் நெருங்கி வருகிறது, கட்சி தொடர்பான கூட்டத்தையும் கூட்ட இருக்கிறோம். அதனால் மீண்டும் ஆஜராகும் தேதியை அவர்கள் உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்கள். சிபிஐ அலுவலகம் உள்ளே என்ன நடந்தது என்பதை கூறுவது மாண்பாக இருக்காது. ஆனால் ஒன்று அந்த சம்பவத்தின் போது 607 காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்ததாக முதல்வர் கூறி இருந்தார். ஆனால் 500 காவலர்கள் இருந்ததாக டேவிட்சன் கூறுகிறார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு பல தவறுகள் செய்துள்ளது. உடற்கூறு ஆய்வு சரியாக நடத்தப்படவில்லை,
இறந்தவர்கள் உடலை அவர்களது உறவினர்கள் மூலம் முன் தேதியை இட்டு கையெழுத்து வாங்கியதாக சிபிஐ இடம் ஆதாரபூர்வமாக புகார் கொடுத்துள்ளோம். ஜனநாயகம் படம் தலைவரின் கடைசி படம் எனவே தொண்டர்கள், நிர்வாகிகள், மக்கள் என அனைவரும் உணர்ச்சிகரமாக இருக்கிறோம். நீதிமன்றத்தின் மூலம் நல்ல முடிவு வரும் என காத்திருக்கிறோம். ஜனநாயகன் கடைசி படம் என விஜய் அறிவிப்பு செய்து இருக்கிறார். வழக்கு உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. யார் யார் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்களோ அனைவருக்கும் நன்றி! கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை என்று கட்சி சார்பாக கேட்ட கோரிக்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என தெரிவித்தார்.


