உருவானது இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. !! - வானிலை மையம் தகவல்..

 
காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு பகுதி


வங்கக்கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதாகவும், தமிழகத்தில் இன்று நிலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனம்ழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. 

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு அறிக்கையில், “நேற்று வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (17-06-2025) காலை 0530 மணி அளவில், தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும்.

•நேற்று தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (17-06-2025) காலை 0530 மணி அளவில், குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்  ஒரு  காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.  இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையை நோக்கி  நகரக்கூடும்.

வானிலை மையம் தகவல்..

இன்று (ஜூன் 17)  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில்  ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர்  மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை  பெய்யவாய்ப்புள்ளது.

ஜூன்  18 அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில்  ஓரிரு இடங்களில் கனமழை  பெய்யவாய்ப்புள்ளது.

19-06-2025 முதல் 23-06-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (ஜூன் 17) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான /  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.