போதைப்பொருள் வழக்கில் மேலும் இருவர் கைது.. கெவினின் கூட்டாளிகள் என போலீஸார் தகவல்..!!

 
போதைப்பொருள் வழக்கில் மேலும் இருவர் கைது.. கெவினின் கூட்டாளிகள் என போலீஸார் தகவல்..!! போதைப்பொருள் வழக்கில் மேலும் இருவர் கைது.. கெவினின் கூட்டாளிகள் என போலீஸார் தகவல்..!!


போதைப்பொருள் வழக்கில்  மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெவினின் கூட்டாளிகள் என போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் போதைப்பொருள் விற்பனை செய்ததாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த  பிரதீப் குமாரை போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்பையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான், அதிமுக முன்னாள்  ஐடி விங் நிர்வாகி பிரசாத்,  நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் கிருஷ்ணா என அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.   இதில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து அவர்கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

போதைப்பொருள் வழக்கு - ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மூலம் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் போதைப்பொருள் வாங்கியதை தான் பார்த்ததாக  பிரதீப் வாக்குமூலம் அளித்திருந்தார். இதனையடுத்து 2 நாட்கள் நடத்தப்பட்ட விசாராணைக்குப் பின்னர் நடிகர் கிருஷ்ணாவும் , வளசரவாக்கத்தைச் சேர்ந்த அவரது நண்பர் கெவின் ஆகியோரை கடந்த 26ம் தேதி போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.  

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், பிரதீப்குமார், ஜான், கெவின் ஆகிய 4  பேரையும் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம்  நேற்று அனுமதி வழங்கியது. இதனையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இதன்தொடர்ச்சியாக மேலும் இருவரை சென்னை அரும்பாக்கம் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.  போதைப்பொருள் சப்ளை செய்த வழக்கில்  அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகிய இருவர் கைதாகியுள்ளனர். இவர்கள் போதைப்பொருள் சப்ளையர் கெவினின் கூட்டாளிகள் என போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.