கல்வி கடைக்கோடி வரை சென்றுசேர உழைத்த காமராஜரின் பணிகளை நினைவுகூர்வோம் - உதயநிதி

 
உதயநிதி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

கர்ம வீரர் காமராஜர் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். 1954 ஆம் ஆண்டு காமராசர்  அப்போதைய முதலமைச்சராக பதவி வகித்தார். ஒன்பது ஆண்டுகள் மாநில முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்பட்டார். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் தமிழகத்தில் பல்வேறு அணைகளையும், பள்ளிக்கூடங்களையும் கட்டியுள்ளார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது.  


இந்நிலையில், காமராஜரின் பிறந்தநாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பெரியவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று. தொடக்கக் கல்வி பெறுவதே பெருங்கனவாக இருந்த காலத்தில் மதிய உணவு மூலம் ஏழை-எளிய பிள்ளைகளை பள்ளி நோக்கி வரச்செய்த காமராஜர் பிறந்த ஜூலை 15ஐ, கல்வி வளர்ச்சி நாளாக முத்தமிழறிஞர் அவர்கள் அறிவித்தார்கள். கல்விக்கு ஓர் கோட்டமாக ரூ.219 கோடியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நம் மாண்புமிகு முதலமைச்சர்  அவர்கள் இன்று திறந்து வைக்கவுள்ளார்கள்.  கல்வி கடைக்கோடி வரை சென்றுசேர உழைத்த காமராஜரின் பணிகளை இந்நாளில் நினைவுகூர்வோம்!. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.