“சிறைவாசிகள் சந்திக்கின்ற பிரச்சினையை கருணாநிதி, மு.க.ஸ்டாலின் அனுபவித்துள்ளனர்”- உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் சார்பில் விடுதலை பெற்ற முன்னாள் சிறைவாசிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் 3.75 கோடி ரூபாய் மதிப்பில் 750 முன்னாள் சிறைவாசிகளுக்கு உதவித்தொகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா , உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் ஐஏஎஸ் , காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் மேடையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கலைஞர் அவர்களுக்கு இந்தத் துறையில் தனி அக்கறை உண்டு. சிறைவாசிகள் சந்திக்கின்ற பிரச்சினையை கருணாநிதி, முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் அனுபவித்துள்ளார்கள். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தான் சிறைகளில் சுகாதாரமான கழிப்பிட வசதி மற்றும் உணவு வழங்கப்பட்டது. இரண்டு கோடி செலவில் சிறை சாலையில் நூலகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வருக்கு பரிசாக வந்த புத்தகங்களை சிறைவாசிகள் படிப்பதற்காக வழங்கி உள்ளார்.
தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும் இரண்டே முதலமைச்சர்கள் தான் இதன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, மற்றொன்று நமது இன்றைய முதல்வர் முக ஸ்டாலின். கடந்த காலத்தை மறந்து உற்றார், உறவினரை நினைத்து உங்களுக்கு தந்திருக்கின்ற தொகை நல்ல முறையில் பயன்படுத்துங்கள்” என்றார்.


