நம் அனைவரின் உயிர் சொல்லாக உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு வாழ்க - உதயநிதி ஸ்டாலின்

 
உதயநிதி

தமிழ்நாடு தினத்தையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நமது நாடு சுதந்திரம் அடைந்த போது மெட்ராஸ் பிரசிடென்ஸி என்று இருந்த நமது தமிழகம் பின்னர் மெட்ராஸ் மாகாணமாக மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மாநிலங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட தினத்தை அந்தந்த மாநிலங்கள் மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. இதேபோல் மதராஸ் என்று அழைக்கப்பட்டு வந்த தமிழகம், 1967 ஜூலை 18ம் நாள் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட தினம் தமிழ்நாடு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு சட்டமன்ற தீர்மானத்தோடு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கனவையும் நிறைவேற்றும் விதமாக தமிழ் நிலப்பரப்புக்கு 'தமிழ்நாடு' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயரிட்ட நாள் இன்று. முத்தமிழ் அறிஞர் வளர்த்தெடுத்த தமிழ்நாட்டை, தமிழ்நாடாகவே போற்றி பாதுகாக்கும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இத்தினத்தை தமிழ்நாடு நாள் என்று அறிவித்தார்கள். மாநிலத்தின் பெயர்ச்சொல் என்றில்லாமல் நம் அனைவரின் உயிர் சொல்லாக உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு வாழ்க. அனைவருக்கும் #தமிழ்நாடு_நாள் வாழ்த்துகள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.