"செக் மோசடி... ரூ.2.92 கோடி முறைகேடு" - அண்ணா பல்கலை.க்கு செக் வைக்கும் மத்திய அரசு!
தமிழ்நாட்டின் மிக முக்கிய பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தனி இடமுண்டு. மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம முழுக்க முழுக்க மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அது துணைவேந்தராக சூரப்பா வரும் வரை தான். கர்நாடகாவைச் சேர்ந்த அவர், தமிழ்நாடு அரசுடன் சரியாக ஒத்துழைக்கவில்லை. மத்திய அரசுடன் நேரடியாக தொடர்பில் இருந்து வந்தார். தன்னிச்சையாக செயல்பட்டார்.
இதன் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாகவும், சூரப்பாவிற்கு ஆதரவாக அப்போதைய வேந்தரான ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. சூரப்பாவின் வருகைக்குப் பின் அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பாக அடிக்கடி சர்ச்சைகள் எழுந்து வந்தன. நேரம் பார்த்து காத்திருந்த தமிழ்நாடு அரசு, சூரப்பா ஊழல் புகாரில் சிக்க, ஆணையம் அமைத்து விசாரணையை தொடங்கியது. விசாரணை ஆணையம் சூரப்பா ஊழல் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாக கூறிவிட்டது. இப்போது அவர் ஓய்வுபெற்று விட்டார்.
இச்சூழலில் சூரப்பா வருவதற்கு முன்னர் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற உபகரணங்கள் கொள்முதல் மற்றும் நிதி மோசடி விவகாரத்தில் விளக்கம் கேட்டு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய தணிக்கைத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் "பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் மல்ட்டி மீடியா ஆய்வு மையத்தின் 2012 முதல் 2020ஆம் ஆண்டு வரையான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது மையத்தின் இயக்குநராகப் பணிபுரிந்த எஸ்.கவுரிக்கு, மத்திய கல்வி அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அவரின் பணிக்காலத்தில் நிதி மேலாண்மையில் முறைகேடு, காசோலை மோசடி, உரிய அனுமதியின்றி விதிகளை மீறி உபகரணங்கள் கொள்முதல் செய்தது உள்ளிட்டவை தொடர்பாக ரூ.2.92 கோடிக்கு குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. அதேபோல், 2017 ஆண்டுக்குப் பின் மல்ட்டி மீடியா ஆய்வு மையத்தின் அனுமதியும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் உரிய விளக்கத்தை உடனே சமர்ப்பிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. கவுரி தற்போது சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக பணியில் உள்ளார். சூரப்பாவை காப்பற்றுவதற்காக பழைய ஃபைல்களை மத்திய அரசு புரட்டியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.