திரையரங்கில் தீண்டாமை ஆபத்தான போக்கு : இயக்குனர் வெற்றிமாறன் கண்டனம்..
ரோஹிணி திரையரங்கில், நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருக்கிறார்.
சிம்பு, பிரியா பவானி சங்கர், கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படம் இந்த படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. இந்தப் படத்தை பார்ப்பதற்காக நரிக்குறவர்கள் சிலர் , சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் வைரலாகி கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பின்னர் அவர்கள் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து ரோகிணி திரையரங்க நிர்வாகத்துக்கு எதிராக நெட்டிசன்களும், சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன் ரோஹிணி திரையரங்க விவகாரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாக பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும், இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது”என்று குறிப்பிட்டுள்ளார்.