"இறந்தவர்களில் 87% தடுப்பூசி போடாதவர்கள்; போடாவிட்டால் மரணம் நிச்சயம்" - ஷாக் கொடுக்கும் டேட்டா!
கொரோனா 3ஆம் அலைக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அதற்கெதிரான தடுப்பூசி போடப்படும் பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது. தொடர்ந்து 4ஆம் கட்டமாக இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இன்று மட்டும் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பை விட பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் ஒருசிலருக்கு இன்னும் அதன் மீதான தயக்கம் அகலவில்லை. அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பொதுச்சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "தடுப்பூசி கொரோனா மரணங்களைப் பெருமளவில் குறைக்கிறது. எனவே அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். ஆகவே தமிழ்நாடு அரசு நடத்தும் மெகா தடுப்பூசி முகாம்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கடந்த 2 மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 1,626 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதில் 1,419 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். உயிரிழந்தவர்களில் 87 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள்.
ஒருவேளை அவர்லள் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மரணத்தை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும். அதேபோல ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் மிகக் குறைவானவர்களே உயிரிழந்திருக்கின்றனர். அதில் 9 சதவீதம் பேர் மட்டுமே. 2 டோஸ் செலுத்திக்கொண்டவர்களில் 4 சதவீதம் பேர் மட்டுமே மரணித்துள்ளார்கள். இந்த எண்ணிக்கைகளைப் பார்க்கும்போது தடுப்பூசி நல்ல பாதுகாப்பை கொடுப்பது தெளிவாகிறது. கடந்த 2 மாதங்களில் 88, 719 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 50 சதவீதம் பேர் வீட்டுத்தனிமையில் சிகிச்சைபெற்று வந்தனர். அவர்களில் 45 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்ததால் நலம் பெற்றுள்ளனர். 5, 816 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4,405 பேர் (76% சதவீதம் பேர்) தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். மேலும், கடந்த 2 மாதங்களில் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 73 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். ஆகவே பொதுமக்கள் தங்களது நலன் கருதி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.