மேட்டுப்பாளையம் - நெல்லை சிறப்பு இரயிலை நிரந்தரமாக இயக்குக - வைகோ வேண்டுகோள்..

 
vaiko


மேட்டுப்பாளையம் - நெல்லை சிறப்பு இரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மேட்டுப்பாளையம் - நெல்லை சிறப்பு இரயிலில் கடந்த 5 மாத காலத்தில் 34,167 பேர் பயணித்துள்ளதாகவும், இதன் மூலம் இரயில்வே துறைக்கு 1,56,000 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கிடைத்த தகவல் தெரிவிக்கிறது. எனவே, இந்த வாராந்திர சிறப்பு இரயிலை வாரம் இருமுறை இயக்குவதுடன், சூலை மாதத்திற்குப் பிறகு நிரந்தரமாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

train

கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 324 பயணியர் இரயில்களில், 316 இரயில்கள் சிறப்பு இரயில்கள் என்ற பெயரில் மீண்டும் இயக்கப்படுகின்றன. ஆனால், அவைகளில் மூன்று மடங்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. ஏற்கனவே, இருந்ததைப் போல சாதாரண கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். பொதுமக்கள் நலனுக்கான இப்பிரச்சினையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இரயில்வே அமைச்சகத்தையும், தென்னக இரயில்வே பொதுமேலாளரையும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.