முதல்வர் ஸ்டாலினை சந்தித்த வைகோ..! பாஜக உடனான கூட்டணி குறித்து கருத்து..!!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைபயிற்சி சென்றபோது ஏற்பட்ட தலைச்சுற்றல் காரணமாக கடந்த 21ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் மருத்துவமனையில் இருந்தவாறே அரசு அலுவல் பணிகளையும் அவர் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் உடல்நலன் தேறி, 6 நாட்களுக்குப் பிறகு கடந்த 27ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஸ் செய்யப்பட்டு வீடு திரும்பிய முதலமைச்சர், 3 நாட்கள் ஓய்வுக்குப்பிறகு நேற்று மீண்டும் தலைமைச்செயலகம் திரும்பி வழக்கமான பணிகளை தொடங்கினார்.
இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்தவகையில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதலமைச்சரை சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது, மு.க.ஸ்டாலினின் உடல்நலம் குறித்து அவர் கேட்டறிந்தார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், துரை வைகோ எம்.பி., யும் உடனிருந்தனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். கவின் படுகொலையில் அரசு எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறேன். ஆவணக்கொலைகளை தடுக்க கடும் சட்டம் இயற்ற வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன். 2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.


