பேராயர் எஸ்ரா சற்குணம் மறைவு : வைகோ, முத்தரசன் இரங்கல்..!
பேராயர் எஸ்ரா சற்குணம் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளார் வைகோ ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவரும் இந்திய சுவிஷேச திருச்சபையின் தலைமை பேராயருமான திரு.எஸ்றா சற்குணம் அவர்கள் இயற்கை எய்தினார் என்கிற செய்தி துயரமளிக்கிறது. சிறுபான்மையினர் நலனுக்காக போராடியவர், ஜனநாயக, முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றியவர். அவரது மறைவு பேரிழப்பாகும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு அன்னாருக்கு அஞ்சலி செலுத்துவதுடன், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார் மற்றும் அவரது இயக்க தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இந்திய சுவிசேஷ திருச்சபையின் பேராயருமான எஸ்ரா சற்குணம் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக தன் 86 வயதில் மறைந்தார் என்ற செய்தி அறிந்து துயரம் அடைகிறேன்.
இந்திய சுவிசேஷ திருச்சபையின் முதல் தேசியத் தலைவர் அவர்; முதல் திருநங்கை போதகராக நியமிக்கப்படக் காரணமானவர். மதச் சிறுபான்மையினர் நலன் காக்கவும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முன்வரிசையில் இணைந்து குரல் கொடுத்தவர் அவர்!

இத்தகைய பெருமைக்குரிய அவரின் மறைவு, கிறித்துவ சமுதாயத்தினருக்கும், சமூகநீதி இயக்கங்களுக்கும் பேரிழப்பாகும்! அவரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அவரின் பிரிவால் துயரம் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கும் என் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


