மதிமுக-திமுக இணைப்பு தொடர்பாக துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்க வேண்டும் - துரை வைகோ

 
durai vaiko

மதிமுக - திமுக இணைப்பு தொடர்பாக துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்க வேண்டும் என மதிமுக தலைமை நிலைய செயலாளரும், வைகோவின் மகனுமான துரைவைகோ கூறியுள்ளார். 

மதிமுக அவைத்தலவர் திருப்பூர் துரைசாமி வைகோவுக்கு எழுதியுள்ள கடிதம் அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வைகோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மதிமுக தொடங்கப்பட்டபோது வைகோ வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரையாற்றினார். அவரது பேச்சைக் கேட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர். ஆனால் வைகோவின் சமீபகால குழப்பமான அரசியல் நிலைப்பாடு காரணமாக முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியை விட்டு படிப்படியாக திமுகவுக்கே சென்றுவிட்டனர். மகனை ஆதரிப்பதும் அரவணைப்பதும், சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது. இதனை வைகோ இன்னும் உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது. 30 ஆண்டுகளாக வைகோவின் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள், மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க, மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்துவிடுவது நல்லது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

துரைசாமியின் இந்த அறிக்கை மதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். துரை வைகோ கூறியதாவது: கட்சியின் பொதுக்கூட்டத்தில் விவாதிக்க வேண்டியதை பொதுவெளியில் வெளியிடுவது முறையல்ல. மதிமுக - திமுக இணைப்பு தொடர்பாக துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.