நான்பெற்ற தங்க பேனாவை தங்கை நந்தினிக்கு பரிசளிக்கிறேன் - கவிஞர் வைரமுத்து!
12ம் வகுப்பு பொத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ள மாணவி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதன்படி தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 91.45% , மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்த சூழலில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவி நந்தினி அனைத்து பாடங்களிலும் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். வணிகவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்த 600க்கு 600 பெற்று சாதனை படைத்துள்ளதால் மாணவிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண்கள் எடுத்து, வரலாற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிலையில், 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ள மாணவி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மாநில தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண்குலத்தின் பெருமை சொல்கிறது. எப்படிப் பாராட்டுவது?. அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன். திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன். உன் கனவு மெய்ப்படவேண்டும் பெண்ணே!" என்று பதிவிட்டுள்ளார்.