ஓ.பி.எஸ் நல்ல முடிவை எடுப்பார்-வைத்திலிங்கம்
தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர், த.வெ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகி வருகின்றன. சமீபத்தில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவான ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் அதில் இருந்து விலகி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் ஓ.பி.எஸ்.க்கு அடுத்த நிலையில் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்திலிங்கம் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சரான மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்திலிங்கம், தனது ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை, ராஜினாமா செய்து விட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுகவில் இணைந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், “தமிழ்நாட்டு முதலமைச்சரை பொதுமக்கள் போற்றுகிறார்கள், புகழ்கிறார்கள். எல்லாருடைய தேவைகளையும் பூர்த்தி செய்யும் திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அதிமுகவில் இருந்து நான் விலகினாலும் அண்ணா ஆரம்பித்த தாய் கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். தேர்தல் சீக்கிரமாக வரவுள்ளது, முடிவு சீக்கிரமாக எடுக்க வேண்டும். ஆகையால் திமுகவில் இணைந்துள்ளேன். நான் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. திமுகவில் இருந்து வந்ததுதான் அதிமுக. திராவிட இயக்கம் சமூக நீதிக்கழகம், திமுக தாய்கழகம். மக்களுக்காக சேவை செய்ய ஆரம்பித்த கழகம் திமுக.
அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை சர்வாதிகாரமாக செயல்படுகிறது. இன்னும் நிறைய பேர் திமுகவிற்கு வர உள்ளனர். முதலமைச்சர் தலைமையில் தஞ்சையில் 26ம் தேதி இணைப்பு விழா நடைபெற உள்ளதாக தெரிவித்தார். டிடிவி தரப்பில் தனிப்பட்ட முறையில் தன்னை இணைவதற்கு அழைத்தார். ஆனால் நான் செல்லவில்லை, அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன், அவர்களின் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை” என தெரிவித்தார். அதிமுகவை பாஜக முழுமையாக கட்டுப்படுத்துகிறதா என்ற கேள்விக்கு மனசாட்சியை தொட்டு நீங்களே பதில் சொல்லுங்கள் என பதிலளித்த வைத்திலிங்கம் பதில், ஓபிஎஸ்-க்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, ஓபிஎஸ்-க்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை, அண்ணன் நல்ல முடிவை எடுப்பார், என பதிலளித்தார்.


