வள்ளலாரின் கோட்பாடுகளை பின்பற்றிட உறுதியேற்போம்- தினகரன் ட்வீட்
வள்ளலாரின் கோட்பாடுகளை பின்பற்றிட அவர் பிறந்த இந்த நன்னாளில் உறுதியேற்போம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
வள்ளலாரின் 200ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதை குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம் " என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இவர் சாதிய பாகுபாடுகளை கடுமையாக சாடினார். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய வள்ளலார், 1867-ல் கடலூர் மாவட்டம் வடலூரில் " சத்ய ஞான சபை " என்ற சபையை நிறுவினார். இங்கு வரும் அனைவருக்கும் 3 வேளையும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இன்றளவும் செயல்பட்டு வரும் இந்த தர்ம சபை வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றி வருகிறது. தர்ம சபைக்கான உணவுப் பொருட்களை தமிழ்நாடு அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன், சாதி மத பேதமின்றி அனைவரிடத்திலும் அன்பை முன்னிலைப்படுத்தி, அனைத்து உயிர்களும் நமக்கு உறவுகளே, அவற்றை துன்புறுத்தக் கூடாது என போதித்த வள்ளலாரின் பிறந்த தினம் இன்று. ஆன்மீக அறிஞர், சொற்பொழிவாளர், சித்த மருத்துவர், ஆசிரியர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்ந்த வள்ளலாரின் கோட்பாடுகளை பின்பற்றிட அவர் பிறந்த இந்த நன்னாளில் உறுதியேற்போம். என்று குறிப்பிட்டுள்ளார்.