திண்டுக்கலில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து - ஒருவர் பலி

 
accident

திண்டுக்கலில் இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த வேன் மோதிய விபத்தில் மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்தார். 

திண்டுக்கல் அருகே உள்ள அம்மையநாயக்கனூர் பொட்டியசெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ் (55). இவரது மனைவி செல்லம்மாள். தம்பதியினர் இருவரும் இன்று காலை திண்டுக்கல் ஆர்.எம் காலனியில் வசிக்கும் மகன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில்  சென்று கொண்டிருந்தனர். திண்டுக்கல் - கரூர் புறவழிச்சாலையில் அஞ்சலி ரவுண்டானா அருகே சென்றபோது பொன்ராஜ் வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த வேன் மோதியது.

dindigul

இதில் வாகனத்தில் நிலைதடுமாறி விழுந்த பொன்ராஜ் மீது வேனின் பின்புற சக்கரம் ஏறியது. இதில், அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செல்லம்மாள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து வந்த தாடிக்கொம்பு போலீசார், பொன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து பொன்ராஜின் மகன் அளித்த புகாரின் பேரில் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவுவ செய்து, வேன் ஒட்டுநரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.