திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் - வானதி வலியுறுத்தல்!

 
vanathi srinivasan vanathi srinivasan

முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தினால் மட்டும் போதாது, முருகனின் முதலாம் படைவீடான திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழர்களுக்கு, 'தமிழ்' எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு முக்கியம் 'முருகப் பெருமான்'. அதனால், அவரை 'தமிழ்க் கடவுள்' என்கிறோம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும், ஒருவரது பெயராவது, முருகன் சார்ந்த பெயர்களாக இருக்கும். அந்த அளவுக்கு தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டற கலந்தவர் முருகப் பெருமான்.தமிழ்நாட்டில் முருகன் கோவில்கள் இல்லாத ஊர்களே இல்லை. ஆனாலும், முருகனின் அறுபடை வீடு மிகமிக முக்கியமானது. புனிதமானது. அதில் மதுரை அருகில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள முருகன் கோயில் முதலாவது படைவீடு, இத்திருக்கோயில் பற்றி நக்கீரர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடியுள்ளனர்.

வரலாறு சிறப்புமிக்க இந்த முருகன் கோயில் அமைந்துள்ள மலையில், தர்கா ஒன்று இடைகாலத்தில் வந்துள்ளது. இதை காரணம்காட்டி இந்த மலையே, தங்களுக்கு சொந்தமானது என்று கூறி, இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள் பிரச்னை செய்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தின் போது, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இப்போது தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை, முருகனின் மலை என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. இந்தச் சூழலில் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட்டு விருந்து நடத்தப் போவதாக, இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள் அறிவித்து தமிழகத்தில் மத மோதலை உண்டாக்க திட்டமிட்டனர். காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்திய நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி தனது ஆதரவாளர்களுடன் திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று அசைவ உணவு சாப்பிட்டுள்ளார்.

Vanathi seenivasan

இந்துக்களின் மனதை, முருக பக்தர்களின் மனதை புண்படுத்த வேண்டும், திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுக்க வேண்டும், தமிழ்நாட்டில் மத மோதலை உண்டாக்க வேண்டும் என்ற தீய உள்நோக்கமே இதன் பின்னணயில் உள்ளது. முருகப்பெருமானின் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்க நடக்கும் சதி திட்டத்தை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்று மத மோதலை உண்டாக்கும் வகையில் செயல்படும் அடிப்படைவாத சக்திகளை, திமுக அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையெனில் விளைவுகள் மோசமாகிவிடும். சிறுபான்மை மததத்தினர் வாக்கு வங்கி அரசியலுக்காக, மத அடிப்படைவாதிகளிடம் திமுக அரசு மென்மையான போக்கையே கடைப்பிடித்து வருகிறது. அதுதான் இது போன்ற பிரச்னைகளுக்கு காரணம். இந்து கோயில்களை மட்டும் தன் பிடியில் வைத்திருக்கும் திமுக அரசு, இந்துக்களை ஏமாற்றுவதற்காக, 'முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தினால் மட்டும் போதாது. முருகப்பெருமானின் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து கோயில்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திமுக அரசு, கோயிலுக்கு ஒரு பிரச்னை என்றால், வேடிக்கை பார்ப்பதும், கோயிலுக்கு எதிரான சக்திகளுக்கு துணை நிற்பதும் காலம் காலமாக நடந்து வருகிறது. 

இனியும் அதுபோல நடக்கக்கூடாது. திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு சாப்பிட்ட முஸ்லிம் லீக் எம்.பி நவாஸ் கனி மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள், மற்றொரு மதத்தின் நம்பிக்கைகளை, புனிதத்தை மதிக்க வேண்டும். அப்படி மதிக்க மனம் இல்லை என்றாலும், இழிவுப்படுத்த கூடாது. இது போன்ற செயல்களை அனுமதித்தால் சமூகத்தில் அமைதி இருக்காது. இதை புரிந்து கொண்டு நவாஸ் கனி மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக வழக்கம் போல, இந்துக்களை ஏமாற்றி விடலாம் என நினைத்தால், முருக பக்தர்கள் திமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.