பாஜக- பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில் எப்பொழுதும் இணைய மாட்டோம்: திருமாவளவன்
அகண்ட பாரதம் என்கிற இந்துத்துவக் கொள்கையின் அடிப்படையில் தான் பாஜகவினர் போரை விரும்புகிறார்கள், வெளியுறவு கொள்கையை தீர்மானிக்கிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையாக ஆதரித்தோம். இந்தியா-பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய யுத்தம் மூண்டு விட கூடாது என விரும்பினோம். இந்த சூழலில் இரு நாடுகளுக்குமிடையே போர் நிறுத்த அறிவிப்பு மகிழ்ச்சியை தருகிறது. அதே நேரத்தில் இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் கூறியது புரியாத புதிராக உள்ளது. பயங்கரவாதத்தை இரு நாடுகளும் இணைந்து துடைத்தெறிய வேண்டும்.
இரு நாடுகளிலும் அமைதி நிலவ வேண்டும் என்பது தான் உலகம் முழுவதும் ஜனநாயகத்தை விரும்பும் அனைவரின் விருப்பமாக உள்ளது. இரு நாடுகளிலும் சுமுக உறவு நிலவ வேண்டும். போர் நிறுத்தம் வரவேற்கத்தக்கது தான் இருந்த போதும் இரு நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சினைகளை தீர்க்க நிரந்த தீர்வு காண வேண்டும். அகண்ட பாரதம் என்கிற கொள்கையின் அடிப்படையில் தான் பா.ஜ.க வினர் போரை விரும்புகிறார்கள். 21ஆம் நூற்றாண்டில் அகண்ட பாரதம் அமைப்போம் என கூறுவது சாத்தியமில்லை. போர் கூடாது, அமைதி நிலவ வேண்டும் என்பது தான் வெகு மக்களின் விருப்பம். உலக வரைபடத்தில் இருந்து பாகிஸ்தா னை அகற்றுவோம் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியது கற்பனை வாதம். இது போன்ற கூற்றுகள் உலக அமைதிக்கு எதிரானதாகத்தான் இருக்கும்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு தேர் திருவிழாவின் போது தேரை வடம் பிடிப்பது அனைத்து சமூக மக்களின் உரிமை. தலித் மக்கள் அவ்வா று படம் பிடிக்க சென்றபோது அவர்கள் தாக்கப்பட்டு இருப்பதாக தரவுகள் கிடைத்தது. இரு சமூக மக்களுக்கு இடையே முன் பகை இருந்துள்ளது அந்த முன்பகையின் அடிப்படையில் தான் திருவிழாவிற்கு சென்றவர்கள் தாக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் தொடர்பாக நீதிமன்ற வழக்கு அதனால் இரு சமூகத்திற்கும் இடையே ஏற்பட்ட முன் பகை காரணமாக தான் தாக்குதல் நடைபெற்று இருப்பதாக அறிக்கையில் தெரிவித்தேன். அந்த அறிக்கை தவறு என்றால் அதை தீர்த்துக் கொள்கிறேன். மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. அகண்ட பாரதம் என்கிற இந்துத்துவக் கொள்கையின் அடிப்படையில் தான் பாஜகவினர் போரை விரும்புகிறார்கள். அதன் அடிப்படையில் தான் வெளியுறவு கொள்கையை தீர்மானித்துள்ளார்கள். இது குறித்து இன்றைய சூழலில் எந்த பொருளில் கருத்து கூறினாலும் இந்துத்துவவாதிகள் அதை எதிராக தான் பார்ப்பார்கள். பாஜக- பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில் எப்பொழுதும் இணைய மாட்டோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.


