அதிமுக - தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி: திருமாவளவன்
அதிமுக - தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி. அப்படி கூட்டணி அமைந்தால் பா.ஜ.க வை கழட்டி விட்டு அதிமுகவின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும் என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த வி.சி.க தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கரூரில் த.வெ.க கூட்டத்தில் உரிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதி உதவி அளிக்க உள்ளோம். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நெரிசலால் ஏற்பட இறப்புகள் வெளிப் புற நிலை தூண்டுதலால் ஏற்பட்ட இறப்பு என த.வெ.க தரப்பில் கூறுகிறார்கள். கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் புற தூண்டுதலால் நடப்பது அல்ல. நெரிசல் சாவுகள் பல சம்பவங்களில் நடந்துள்ளது. இல்லாத பொல்லாத கட்டுகதைகளை பேசுவதும் கற்பனையாக பேசுவதும் அண்ணாமலைக்கு வாடிக்கையாக உள்ளது. சமூக பதட்டத்தை உருவாக்கவே அவர் குறியாக இருக்கிறார்.
விஜய்க்கு என்ன ஆபத்து ஏற்பட போகிறது என்பது நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. கரூர் சம்பவத்தை சென்னை உயர் நீதி மன்றம் விசாரணை செய்வது ஏன் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் என்ன பின்னணியில் விசாரிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. நீதிபதிகள் தான் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். விஜய் மக்கள் செல்வாக்கு மிக்கவர் அவர் செல்லும் போது பாதுகாப்பு தேவைதான் அவர் கோரிக்கை வைத்ததில் எந்த தவறும் இல்லை. அதிமுக - தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி. அதிமுகவும் பா.ஜ.கவும் கூட்டணியில் இருக்கும் சூழலில் விஜய் தன் கொள்கை எதிரியாக கூறும் பா.ஜ.க அங்கு வகிக்கும் கூட்டணியில் இடம் பெறுவாரா என்பது தெரியவில்லை. அப்படி கூட்டணி வைத்தால் பா.ஜ.க வை கழட்டி விட அதிமுக தயாராக இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது. அப்படி பா.ஜ.க வை கழட்டி விட்டால் அதிமுகவின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும்.
சென்னையில் என்னுடைய கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறி சில தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது. அண்ணாமலை இந்த விவகாரம் தொடர்பாக முந்தி கொண்டு கருத்து கூறி பதட்டத்தை ஏற்படுத்தப்பார்க்கிறார். அவர் முந்தி கொண்டு கருத்து கூறியது உள்நோக்கம் கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். அடங்க மறு என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கூறிய அரசியல் முழக்கம். எனக்கு பாதுகாப்பாக என்னுடைய தொண்டர்கள் இருப்பார்கள்” என்றார்.


